இயக்குனர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செந்தில்வேல் திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் பார்ப்பதற்காக வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, இயக்குனர் அமீர் நடித்துள்ள திரைப்படம் பார்ப்பதற்காக வந்துள்ளேன். சீரியஸான அமீர் ஜாலியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.  கடின உழைப்புக்கு பின் வரப்பட்ட படம். 


சாதிய பாகுபாடு இல்லையா?


இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணம். விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 15 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும்.


விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும். சம்பளம் கொடுத்து தான் வேலைக்கு நாம் செல்கிறோம். காப்புரிமை பிரச்சனை என்பது அனைத்து தளங்களிலும் உள்ளது. உருவாக்குபவர்களுக்கான உத்திரவாதமும், உரிமையும் தேவை என்பதை நான் நினைக்கிறேன்.


அரசியலுக்கு வருகிறேனா?


2026ம் ஆண்டு முதல் அரசியலில் பணி செய்யப் போவதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. அவர்களது பணிக்கு பின்னரே அவர்களது செயல்பாடு தெரியும். அரசியலுக்கு அனைவரும் வரலாம். அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிவிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஓ டி டி தளம் மிகப் பெரிய பலமாக இருந்தது.


தயாரிப்பாளர்கள் முதலீட்டை பெறுவதற்கு ஓடிடி தளம் மிகப்பெரிய உதவியாக அமைந்தது. ஆனால் முழுக்க முழுக்க ஓ டி டி தளத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது. திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு மக்கள் வந்து பார்த்தால் கிடைக்கும் வருவாய் எப்படி இருக்கும் என்ற நிலை மீண்டும் திரும்பி உள்ளது என அவர் தெரிவித்தார்.


திரையரங்கில் படம் பார்ப்பது மாற போவதில்லை, திரையரங்க சூழல், அதன் தன்மை மாறும். ஆனால் திரையங்கிற்கு வரும் நிலை மாறாது. திருநெல்வேலியில் படம் எடுப்பதற்கு காரணம் ஒவ்வொரு காலநிலையை பொருத்தது. தற்போது கோடையிலும் தண்ணீர் வருவதால் எடுக்கிறோமே தவிர வேறு எதுவும் இல்லை. சின்னத்துரையின் மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு, எந்த இடத்தில் அவரை தாக்கினார்களோ அவர்களை அந்த இடத்திலே தாக்கி அதாவது மதிப்பெண் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளார் என்று தெரிவித்தார்.