நாட்டில் மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை செயல்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு செல்ல நினைப்பவர்கள் ரெயில் பயணத்தையே பெரிதும் விரும்புகிறார்கள். பஸ்களை காட்டிலும் குறைந்த கட்டணம் மற்றும் களைப்பு தெரியாமல் சென்று வரலாம் என்பதால் ரெயில் பயணத்துக்கு தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ரெயில் நிலையங்களை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அடுத்தபடியாக நாகர்கோவில் டவுன் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. டவுன் ரெயில் நிலையமானது பள்ளிவிளையில் அமைந்துள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு, கோட்டயம் செல்லும் பயணிகள் ரெயில்கள் இங்கு நின்று செல்வது வழக்கம். இதேபோல திருநெல்வேலி பிலாஸ்பூர், திருநெல்வேலி-ஹப்பா வாராந்திர ரெயில்கள், திருநெல்வேலி-மும்பை, திருவனந்தபுரம்-சென்னை ஆகிய சிறப்பு ரெயில்கள், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட ரெயில்களும் டவுன் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

 



 

ஆனால் டவுன் ரெயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயணிகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. முக்கியமாக நடைமேடை மிகவும் தாழ்வாக இருந்ததால் ரெயிலில் ஏறவும், இறங்கவும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். எனவே டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதை தொடர்ந்து இரட்டை ரெயில் பாதை பணிகள் தொடங்கிய பிறகு டவுன் ரெயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கழிவறை வசதி, குடிநீர் மற்றும் இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது இருபுறமும் நடைமேடை உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதனால் பயணிகளால் சிரமம் இன்றி ரெயிலில் ஏறவும், இறங்கவும் முடிகிறது. மேலும் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

 

இந்தநிலையில் அக்டோபர் மாதம் முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு பதிலாக டவுன் ரெயில் நிலையத்தில் நின்று செல்லலாம் என்று கூறப்படுகிறது.

 



 

இதன் காரணமாக டவுன் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முன்பதிவு மையத்தில் கழிவறைகள் திறக்கப்பட்டு உள்ளன. பயணிகள் காத்திருப்பு அறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு நிலைய மேலாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்குள் நிலைய மேலாளர் அலுவலகம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல தொடங்கிய பிறகு அதிகளவிலான பயணிகள் டவுன் ரெயில் நிலையம் வந்து செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கிங் வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான அளவீடு பணிகள் முடிந்து நிலத்தை சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நேற்று தீவிரமாக நடந்தன. பார்க்கிங்கில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட உள்ளன. மேற்கூரை வசதியுடன் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.