திருநெல்வேலி அருகே மகள் காதலியுடன் சென்றதால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேஇயுள்ள செட்டிமலன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே கல்லூரி மாணவியான சின்னத்துரை மகளும், வல்லநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். 


இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு சின்னத்துரை - சங்கரம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த இரு தினங்கள் முன்பு அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தன் காதலனுடன்  திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


இந்த தகவலை அறிந்த சின்னத்துரை குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சின்னத்துரை சங்கரம்மாளிடம் மகள் இப்படி செய்து விட்டாளே, இனி வெளியே எப்படி தலை காட்ட முடியும் என அவமானம் தாங்க முடியாமல் புலம்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாகவும் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். 


குடும்ப நிலையை எண்ணி மனமுடைந்த சங்கரம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டி தற்கொலை செய்துக் கொண்டார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சங்கரம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையில் கோபத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய சின்னத்துரை, சாயர்புரம் அருகேயுள்ள சிவலூர்-அடைக்கலாபுரம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில்  மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்றபோது சின்னத்துரை விஷம் குடித்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சின்னத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு, சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மகள் காதலனுடன் சென்றதால் கணவன் - மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)