நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் நடந்த மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை பெண் வீட்டார் சூரையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டன அறிக்கையை வெளியிட்டார். அதில்,


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் நேற்றைய தினம் (ஜூன் 13, 2024) திருமணம் செய்து கொண்டனர். இன்று (ஜூன் 14, 2024) மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர். இதனை பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில் பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பாகவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற அருள்ராஜ் மற்றும் முருகன் இருவரையும் தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கும்பலில் சிலரை பிடித்துள்ளனர்.


                மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.


                திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதுடன்  சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.


அதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.சடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட குழு நெல்லையில்  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று 13-06-2024 சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இன்று(14-6-2024) மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட அலுவலகத்தை சில விஷமிகள் மூர்க்கத்தனமாக தாக்கி சேதப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கொடூரமான செயலைக் கண்டிப்பதோடு, சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களை காவல்துறை விரைந்து கைதுசெய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நெல்லை மாவட்ட குழு கேட்டு கொள்கிறது. நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக சாதிக்கொலைகள் நடப்பதால் தமிழ்நாடு அரசு இதில் தனிகவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.