நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது,  தொடர்ந்து  இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். காதல் ஜோடிகளுக்கு நேற்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனை அறிந்த பெண் வீட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த போது  ரகளை ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த பெண் வீட்டாருடன் அப்பெண் வர மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட முயன்ற நிலையில் ஆத்திரமடைந்த பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு உள்ளிட்ட அனைத்தையும் சூரையாடியதுடன் அடித்து நொறுக்கி  ரகளை ஈடுபட்டுள்ளனர்.




இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருள், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழனி உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், மேலும் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா சம்பவ இடத்திற்கு  நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.. மேலும் இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்  நடைபெற்ற நிலையில் பெண் வீட்டை சேர்ந்தவர்கள் கும்பலாக அலுவலகத்திற்கும்  நுழைந்து அங்குள்ள பொருட்களை சூரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.