கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஐந்து விசைப்படகுகள் இழுவலைகள் மூலம் நெல்லை இடிந்தகரை கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் வலை விரித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிலர்  கடலுக்குள் சென்று அவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் கடற்கரையை ஒட்டி மீன் பிடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் செல்லாமல் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சுமார் 12 வள்ளங்களில் சென்று அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.  மேலும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே விசைப்படகு மீனவர்கள் அங்கிருந்து தங்கள் பகுதிக்கு திரும்பி சென்று உள்ளனர். இதுகுறித்து சின்ன முட்டம் பகுதியைச் சார்ந்த விசைப்படகு ஓட்டுநர் கிறிஸ்டி என்பவர் கடலோர பாதுகாப்பு குழும  காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில் இடிந்தகரையைச் சார்ந்த ஜெனிஃபர், வளன், ராயப்பன், சைல்ஸ் ஆனந்த், சிபி, பீட்டர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும். ஆனால் அவ்வப்போது விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதோடு அவர்கள் விரித்திருக்கும் வலைகள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தி செல்வதாக கூறி இரு மாவட்ட மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.