தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக இலங்கைக்கு  மஞ்சள், வெங்காய விதை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்தது. இதனால் உளவுப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையினர், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் தூத்துக்குடி  பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

                               

 

இந்த நிலையில் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் ஹவுசிங் போர்டு வீட்டின் மாடி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் 23 பாக்கெட்டுகளில் பவுடர் போன்ற பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து பரிசோதனை செய்தனர். அந்த பாக்கெட்டுகளில் எபிடிரைன் என்று அழைக்கப்படும் போதை பொருள் இருந்தது. இந்த எபிடிரைன் ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


                              

 

இதில் மொத்தம் சுமார் 23 கிலோ எபிடிரைன் போதை பொருள் இருந்தது. உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த போதை பொருளை தூத்துக்குடி வழியாக வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது மேலும் இந்த போதை பொருளை பதுக்கி வைத்தவர் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

                               

 


அனுமதி இன்றி மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை - மதுரை எஸ்.பி எச்சரிக்கை


இது மருந்துக்காக பயன்படுத்தப்பட்டு வருவது தடை செய்யப்படவில்லை என்றாலும் எபிடிரைன் பவுடராக அதிகளவில் பதுக்கி வைத்திருப்பது போதைக்கு உபயோகப்படுத்தலாம் என்பதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது இங்கிருந்து எந்த நாட்டுக்கு கடத்தப்பட இருந்தது, எங்கிருந்து மொத்தமாக வாங்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுப்பட்டு உள்ளனர்.