மத்திய அமைச்சர் வி.கே சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரிகுளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒரு ஒழுங்கீனமான செயலாகும்.

 

பாரத் ஜோடா யாத்திரை என்பதற்கு பதில் தோடா யாத்திரை என்று பெயர் வைத்திருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கான பிரதமர் ஆவார். ஆனால் காங்கிரசார் குறுகிய கண்ணோட்டத்துடன் அவரது படத்தை சேதப்படுத்தி உள்ளனர்.

 

ராகுல் காந்தியின் யாத்திரையில் அரசியலையும் மதத்தையும் இணைத்து உள்ளனர். யாத்திரையின் போது சில மத தலைவர்களை ராகுல்காந்தி சந்தித்து உள்ளார். இந்தியா மத சார்பற்ற நாடாக விளங்குகிறது. ஆனால் ராகுல் காந்தி மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் சாலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அனைத்து பணிகளும் கிடப்பில் போடப்பட்டது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் சாலை பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டு தற்போது வேலைகள் நடை பெற்று வருகிறது.

 

காவல்கிணறு- களியக்காவிளை வரை உள்ள நான்கு வழி சாலை பணிகள் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வில்லை.

 

சாலை பிரச்சினைகள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் தொடர்பு கொண்டு பேசினேன்.அவர் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தால் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 65 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்க ப்படும். காலாவதியான டோல் கேட்டில் பணம் வசூல் செய்தால் புகார் செய்யுங்கள். செலவினங்களின் அடிப்படையில் தான் டோல்கேட் நிர்ணயம் செய்யப்பட்டு பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

 

அ.தி.மு.க .எத்தனை பிளவு பட்டாலும் எனக்கு அக்கறை இல்லை. எனது விருப்பம் பாரதிய ஜனதா விற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தான். பாரதிய ஜனதாவை வலுப்படுத்துவதே தற்போது எனது குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்டதலைவர் தர்மராஜ் மாநில செயலாளர் மீனா தேவ்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மாவட்ட பொருளாளர் முத்து ராமன் மற்றும் நிர்வா கிகள் உடன் இருந்தனர்.

 

முன்னதாக அமைச்சர் வி.கே.சிங்  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அதன் பிறகு அவர், சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு செல்லும் நான்கு வழி சாலையில் மகாதானபுரம் அருகே உள்ள நரிக்குளம் மேம்பாலம் பகுதியில் பிரதமர் மோடியின் கல்வெட்டு சமீபத்தில் சேதம் அடைந்ததை பார்வையிட்டார்.