தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் மாயமானார். 2 மீனவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ரியாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், திரேஸ்புரத்தை சேர்ந்த சேக்முகமது(வயது 43), ஜெயபால்(45), அண்டோ(45) ஆகியோர் கடந்த 17-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் திரேஸ்புரத்தில் இருந்து புறப்பட்டனர். நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் காயல்பட்டினம் கொம்புதுறையில் இருந்து சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது படகு விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளது. இதனால் படகில் இருந்த 3 பேரும் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.




நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம் கொம்புதுறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்தனர். உடனடியாக மீனவர்கள் தத்தளித்துக் கொண்டு இருந்த ஜெயபால், அண்டோ ஆகிய 2 பேரையும் மீட்டனர். சேக் முகமதுவை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை. இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட 2 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இதைத் தொடர்ந்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்கப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, அந்த பகுதியில் சரக்கு பெட்டகம் ஏற்றி வந்த ஒரு கப்பல் படகின் மீது மோதியதாகவும், இதில் படகு சேதம் அடைந்து மூழ்கிவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார், குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியில் ஏதேனும் கப்பல் வந்து உள்ளதா, அந்த கப்பல் எங்கு சென்று உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கடலில் மாயமான சேக்முகமதுவை  தேடும்பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.