கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகேவுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். திராவிட இயக்க சிந்தனையாளரான இவர் ம.தி.மு.க நட்சத்திர பேச்சாளராக இருந்தார். பின்னர் அ.தி.மு.க-வுக்கு தாவினார். அதைத் தொடர்ந்து, அ.ம.மு.க-வில் இணைந்தார். சமீபகாலமாக தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் பேசி வந்தார். இலக்கிய மேடைகளிலும் தொடர்ந்து தென்பட்டார் நாஞ்சில் சம்பத். சிறந்த பேச்சாளரான இவருக்கு ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உருவான வலிப்பு, ஞாபக மறதி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்த அவர்  உடல்நிலை பாதிக்கப்பட்டு  சுயநினைவை இழந்ததால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர்.


பின் அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனும் முதுநிலை மருத்துவரான சரத்பாஸ்கர் துணையுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு IMCU-2 வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு உரிய ஞாபகத்திறன் இல்லை என கூறப்படுகிறது. இவரின் இந்த நிலை சீராக 3 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரை அரசு மருத்துவ கல்லூரியின் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இவருக்கு இது போன்று இரண்டு முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு இரண்டு, மூன்று  நாட்களுக்கு பின் சரியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.