தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மகள் காதலனோடு சென்று கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.




ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் க.சின்னத்துரை (43). விவசாயியான இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகன். இதில் மூத்த மகள் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். மகன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரையின் மகள் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு சமுகத்தை சார்ந்தவர். இதனால் அவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.




இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னத்துரையின் மகள் வீட்டைவிட்டு வெளியேறி காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சின்னத்துரை மற்றும் சங்கரம்மாளுக்கு தெரியவந்ததால் இருவரும் மிகவும் வேதனையடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சங்கரம்மாள் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.




இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் அருகில் இருந்தவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சங்கரம்மாள் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சங்கரம்மாளின் கணவர் சின்னத்துரைக்கு தகவல் தெரிவிப்பதற்காக அக்கம்பக்கத்தினர் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவரது ஃபோன் தொடர்பு எல்லைக்குள் இல்லை என தெரியவந்தது




இந்நிலையில் சாயர்புரம் அருகே  அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சின்னத்துரை விஷம் குடித்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




காதல் திருமணம் காரணமாக தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டதால் ஊரில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கருதி இரண்டு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறப்பநாடு மற்றும் சாயர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)