நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில், கீழப்புலியூர், மேட்டூர், இரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுண் ஆகிய ரயில் நிலையங்களில் 405 மீ நீளம் கொண்ட ஒற்றை நடைமேடையும், பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீ நீளம் கொண்ட இரு நடைமேடைகளும், அம்பையில் 475 மீ கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது. காரைக்குறிச்சியில் 270 மீ கொண்ட ஒற்றை நடைமேடையும் உள்ளது. குறிப்பாக நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில்  பயணிகள் நடைமேடைகளும், 2 சரக்கு லைன்,ஒரு வி ஐபி லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட  ரயில்கள் நிறுத்துவதற்கு  540 மீ நீளம் கொண்ட நடைமேடை தேவை.   தென்காசி & நெல்லை ரயில் நிலையங்களில் மட்டுமே தென்காசி - நெல்லை ரயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற அனைத்து ரயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும். எனவே இந்த ரயில் நிலையங்களின் நடைமேடைகளின் வழித்தடத்தை நீடிக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.



குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து  கேரளா செல்லும் மிக முக்கிய வழித்தடமான திருச்செந்தூர் - நெல்லை -  தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடத்தில் நெல்லை, தென்காசி, செங்கோட்டை தவிர மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் இல்லாத காரணத்தினால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள், ரயில் பயணிகள் சங்கங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும் தொடர்ந்து என்று கோரிக்கை வைத்து வந்தனர்.


அந்தக் கோரிக்கையை ஏற்று மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் திருச்செந்தூர் -  நெல்லை - செங்கோட்டை -  கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க முன்மொழிவு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் -  நெல்லை இடையே திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர் நாசரேத், ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களிலும்,  நெல்லை - தென்காசி இடையே சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 550 மீட்டர் நீளத்துக்கு அதிகரிக்கவும், செங்கோட்டை - புனலூர்  இடையே புதுஆரியங்காவு,  தென்மலை, எடமண் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 450 மீ அதிகரிக்கவும்,  அவனீஸ்வரம், குரி, கொட்டாரக்கரை, குண்டாரா கிழக்கு குண்டாரா, சந்தனத்தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 550 மீட்டர் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நடைமேடைகளை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை தயார் செய்யப்பட்டு வரும் பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்குவதற்கு முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.




இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று ரயில் நிலைய நடை மேடைகளின் நீளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ள மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த எம்பி எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நன்றி. தற்போது கூட்ட நெரிசலை தவிர்க்க செந்தூர் எக்ஸ்பிரஸிலும் , பாவூர்சத்திரம் அம்பை வழியாக செல்லும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயிலிலும் கூடுதல் தூங்கும் வசதி  பெட்டிகள் இணைக்க முடியாத நிலை உள்ளது. 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகள் நீட்டிக்கப்பட்டவுடன் மேற்கண்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியும். பண்டிகை காலங்களில் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை இயக்கவும் முடியும். இது தென் மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.


முன்னதாக கடந்த மாதம் தென்காசி மாவட்டம் திப்பணம்பெட்டியை சேர்ந்த ஜெகன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இது குறித்து தகவல் கேட்டிருந்தார். அதற்கு மதுரை ரயில்வே கோட்ட மூத்த பொறியாளர் சூரியமூர்த்தி அளித்த பதிலில், பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை என்று பதிலளித்திருந்தார், அது குறித்த செய்தியையும், பயணிகளின் கோரிக்கை குறித்தும் ஏபிபியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினரின் கோரிக்கையின் படி இத்திட்டம் நிறைவேறுவதற்கான முன்மொழிவு செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..