ஆர்.எஸ்.மங்கலத்தில் முதியவர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மடையை சேர்ந்தவர் சந்தியாகு (எ) சந்திரசேகர். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது80). இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன்-மனைவி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பாடு வாங்குவதற்காக ஆர்.எஸ்.மங்கலம் டவுண் பகுதிக்கு சந்தியாகு சென்றுள்ளார். இதனால் ஞானசவுந்தரி தனியாக வீட்டில் இருந்துள்ளார். சாப்பாடு வாங்கி விட்டு சந்தியாகு வீட்டுக்கு திரும்பி வந்தபோது ஞானசவுந்தரி தலையின் பின்புறம் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததாக ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.


இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.




ஞானசவுந்தரி தலையின் பின்பக்கம் காயம் இருப்பதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. இதனால் கொலையாளி கொலை நடந்த இடத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சென்று பஸ்சில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தபின் ஞானசவுந்தரியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.


ஞானசவுந்தரியின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விசாரணையின் போது சந்தியாகு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓட்டலில் வேலைசெய்து வந்த ஒரு நபரை போலீசார் தேடிச் சென்றனர். அப்போது அவர் ஊருக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.






இதனால் அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது கணவரே மனைவியை அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 






மேலும், மோப்ப நாய் சோதனையில் சம்பவ இடத்தில் இருந்து ஓடி கடைசியாக ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து கணவர் சந்திரசேகரையே  சுற்றி சுற்றி வந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஞானசவுந்தரியின் பிரேத பரிசோதனையில் தலையில் அடித்து கீழே தள்ளி அதன் பின் கழுத்து நெரித்து காெலை செய்த விவரம் தெரிய வந்தது. மேலும்  தடயங்கள், கைரேகை ஆகியவற்றை வைத்து விசாரித்ததில் கணவரே தனது மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியது.





பின்னர் போலீசார் முறையாக  நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறியுள்ளார். அதில் சந்திரசேகர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு செய்தபிறகு தனக்கு கிடைத்த ஓய்வூதிய தொகையை வைத்துக் கொண்டு விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போலவும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்  சான்றிதழ் வாங்கி கொடுப்பது போலவும்  அவர்களை அணுகி மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி தவறான உறவு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.




இவர் பல பெண்களுக்கு பணத்தை செலவு செய்து வந்ததை  அவரது மனைவி தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரம் அடைத்த சந்திரசேகர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து திருப்பி பின்தலையில் அடித்து காயப்படுத்தி கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


கடந்த மூன்று  நாட்களாக யார் கொலை செய்தார்கள் என்று தெரியாத நிலையில் பரபரப்பாக இருந்து வந்த சூழ்நிலையில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு  நாடகமாடியது தெரியவந்தது.  இதனையடுத்து தற்போது தீராத விளையாட்டு தாத்தா  சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.