நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு கோடையை சமாளிக்கும் அளவில் நீர் மோர் மற்றும் வெட்டிவேரிலான தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல்துறையினருக்கு நீர்மோர் வழங்கினார். வெட்டிவேரிலான தொப்பிகளையும் அவர்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "கோடையை சமாளிக்க தொப்பியும், நீர் மோரும் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மாநகரத்தில் சிசிடிவி கேமராக்கள்  உதவியோடு இருசக்கர வாகனங்கள் திருட்டுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறோம். இது தொடர்பாக நேற்று இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 22 வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சாலை விதிகளை பின்பற்றாத 1600 நபர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.




கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 60 லட்சம் ரூபாய் நேரடியாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும், நீதிமன்றம் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை ஆறு மணி முதலே போக்குவரத்து காவலர்கள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் நிலையத்தை புதிய பேருந்து நிலையம் அருகே கொண்டு செல்வதன் மூலம் மாநகர மையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண