நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தென் மாவட்டங்களில் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது.  நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்திலிருந்து 7 விரைவு ரயில்களும், 11 சிறப்பு (பாசஞ்சர்) ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 52 விரைவு ரயில்கள், 15 சிறப்பு (பேசஞ்சர்) ரயில்கள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. 


இந்நிலையில் கடந்த 2022 - 23 நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களின் வருமானம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தில் சென்னை சென்ட்ரல் 1085 கோடியும், இரண்டாமிடத்தில் சென்னை எழும்பூர் 523 கோடியும், கோவை 283 கோடியுடன் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென் மாவட்டங்களை பொருத்தவரை மதுரை 190.7 கோடியுடன் ஆறாவது இடத்தையும், நெல்லை 111.7 கோடியுடன் 12 வது இடத்தையும் பிடித்துள்ளன.




500 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் என்எஸ்ஜி-1 எனவும், 100 கோடி முதல் 500 கோடி வரை வருவாய் வருவாய் இருந்தால் என்எஸ்ஜி-2 எனவும், 20 கோடி முதல் 100 கோடி வரை வருவாய் இருந்தால் என்எஸ்ஜி - 3 எனவும் ரயில் நிலையங்கள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது வரை நெல்லை ரயில் நிலையம் 100 கோடிக்கு உள்ளாகவே வருமானம் தந்து கொண்டிருந்ததால் என்எஸ்ஜி-3 பிரிவிலேயே இருந்தது. இந்த நிதியாண்டில் முதல் முறையாக 111.7 வருமானம் கிடைத்துள்ளதால் என்எஸ்ஜி-2 அந்தஸ்தை உயர்த்துவதற்கு தகுதி பெற்றுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் என்எஸ்ஜி-3 லிருந்து என்எஸ்ஜி-2 ரயில் நிலையமாக மாறும் போது பல்வேறு புதிய வசதிகள்  ரயில்வே செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக..


1. பயணிகள் ஓய்வு அறை 125 சதுர மீட்டரிலிருந்து 250 சதுர மீட்டர்க்கு விரிவாக்கம் செய்யப்படும்.


2. நடைமேடை இருக்கைகள் 125லிருந்து 150ஆக உயர்த்தப்படும்.


3. நடைமேடை மேற்கூரை நீளம் 400 சதுர மீட்டரிலிருந்து 500 சதுர மீட்டர்க்கு நீளம் கூட்டப்படும்.


4. சிறுநீர் கழிவறை 10லிருந்து 12 ஆக உயர்த்தப்படும்.


5. கழிவறை 10லிருந்து 12 ஆக உயர்த்தப்படும்.


6. குளிர் தண்ணீர் இயந்திரம் ஒரு நடைமேடைக்கு இரண்டு வீதம் வைக்கப்படும்.


7. இணைய கணிணிமையம்.


8. உயர்தர உணவு பிளாசா.


9. பிரிபெய்டு டாக்சி.


10. இரண்டாவது நுழைவு வாயில்.


11. குளிர்சாதன விஐபி உயர்தர ஓய்வு அறை


என அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.




இது குறித்து கேட்கும் போது, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் 2022 - 23 நிதியாண்டில் முதல் முறையாக 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளதால் என்எஸ்ஜி-3 ல் இருந்து என்எஸ்ஜி-2 பிரிவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  தரம் உயர்த்தப்பட்ட வரைமுறையின்படி பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் மற்றும் பல்வேறு விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளது இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது என ரயில் நிலைய மேலாளர்  தகவல் தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண