விளாத்திகுளம் மாணவி வழக்கில் கொலையாளியை கைது செய்தது எப்படி? என்பது குறித்து தூத்துக்குடி எஸ்பி மதன் விளக்கம் அளித்துள்ளார்.
விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே பாலியல் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வழக்கில் தர்ம முனீஸ்வரம் கைது செய்யப்பட்டது குறித்து தூத்துக்குடி எஸ்பி மதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எஸ்பி அளித்த பேட்டியில், “விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேர்த்தியான தொழில்முறை விசாரணை மூலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து குற்றவாளியை கைது செய்துள்ளோம். அறிவியல்பூர்வமான விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல், அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம். பாலியல் குற்றத்தில் தண்டிக்கப்பட்டு, மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது குற்றவாளி பிணையில் வெளியே வந்துள்ளார். ஏற்கனவே தண்டிக்கப்பட்ட கைதிகள், ஜாமினில் வெளியே வந்த கைதிகள் என அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தினோம். விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட அனைவரையும் ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.
98 சிசிடிவிக்களை ஆராய்ந்து குற்றவாளி கைது
மாணவி கொலை வழக்கில் 98 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை கைது செய்துள்ளோம். வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். ஒவ்வொரு விசாரணையையும் தனித் தனியாக, தனிப்படைகள் அமைத்து மேற்கொண்டோம். 461 குற்றவாளிகள் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தினோம்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். கைது செய்யப்பட்ட நபரிடம் ரத்த மாதிரி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்.
குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தருவோம்
குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுப்போம் தருவோம். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 10 சிசிடிவி கேமராக்கள் பொருந்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பெண் காவலர்கள் மூலமாக கிராமப் புறங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு மகளிர் காவல் குழுக்கள் அணிவகுப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சிறுமி பெயர், படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்துவது சட்டவிரோதம், விதிமீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
