மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட்டார். 


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  மேற்கொண்ட ஆய்வின்போது மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்து வெள்ளச் சூழல் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தினர். மேலும், பல்வேறு அமைப்புகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வும் செய்தனர். 


இந்த ஆய்வு கூட்டத்தின்போது திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


இந்த ஆய்வுக் கூட்டத்தில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன், மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தற்போதைய நிலைமை மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கினர். மேலும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தேவையான நிதி குறித்து 72 பக்கங்கள் கொண்ட விரிவான குறிப்பாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. 






தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள முறப்பநாடு, கோவில்பட்டி மற்றும் குறிஞ்சி நகர் ஆகியவற்றை மத்திய நிதியமைச்சர் பார்வையிட்டார். கோரம்பள்ளம், மறவன்மடம், முறப்பநாடு, மானாதி ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்த அல்லது மழையில் அடித்துச் செல்லப்பட்ட பலரது பிரச்னைகளை கேட்டறிந்த அவர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டத்தின் கீழ் உள்ள நிதியை பயன்படுத்தி மீண்டும் கட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தகுதியுள்ள பெண்களுக்கான வீடுகள் மற்றும் திட்டத்தின் கீழ் வராதவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கான வழிகளை செய்து தருவதாக கூறினார். 


தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர், ஒரு ஆய்வுக் கூட்டத்தில், பிரதான் மந்திரியின் கீழ் உள்ள 1.38 லட்சம் ஹெக்டேர் பயிர்களுக்கான 2.50 லட்சம் விவசாயிகளுக்கான கோரிக்கைகளை காப்பீட்டு நிறுவனங்கள் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு, வரும் நாட்களில், கோரிக்கைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.


அப்போது ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் திருக்கோயில் ரத யாத்திரை பாதையில் தண்ணீரும், சேறுமாய் இருப்பதாக பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அதிகாரிகளை அழைத்த நிர்மலா சீதாராமன், “ "நான் கிண்டலும் கேலியுமா பேசுறேன்னு நினைக்காதீங்க. பெருமாள் ஊர்வலம் வரக்கூடிய அந்த பாதையை சரி பண்ணி கொடுங்கன்னு அவங்க கேட்குறாங்க, இவங்களும் அதையேதான் கேட்குறாங்க. சீக்கிரம் பண்ணி கொடுங்க” என்று தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.