தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஓரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஐந்தாவது தடமாக விண்வெளி தடமும் அமைய உள்ளது. தொழிற்சாலைகள், துறைமுகம் என வளர்ந்து வரும் நகரமாக துாத்துக்குடி இருந்து வருகிறது.  பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள் துாத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து முறை விமானமும், பெங்களூருக்கு இருமுறை விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.




                                                                    விமான நிலையம் விரிவாக்கம்


வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமானநிலைய புதியமுனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச்சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.




                                                                        5 விமானங்கள் நிறுத்தும் வசதிகள்


புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்துக்கு1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்புஅறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீனவசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.




                                                                                  பசுமை கட்டிடம்


இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற 2024 அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதே போன்று ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்தமாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளது.




                                                                     ஏ 321 ரக ஏர்பஸ் விமானங்கள்


இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது,தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததும் சென்னை, பெங்களூரு மட்டுமின்றி, ஹைதராபாத், குஜராத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும். சுமார் 250 பயணிகள் செல்லும் ஏ 321 ரக ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3611 மீட்டர். அதற்கு அடுத்தப்படியாக 3115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட இரண்டாவது பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக தூதுக்குடி அமைகிறது. இதன் மூலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் பயன்பெறுவர் என்கின்றனர்.