தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1.80 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 16.07.2007  தி.மு.க. ஆட்சியில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. 20 நாட்கள் மட்டுமே இயங்கிய அப்பேருந்து நிலையம் தற்போது வரை செயல்படவில்லை. சென்னை, நாகர்கோவில், கோவை,  சேலம், மதுரை, பெங்களூர் , ஓசூர், திருப்பதி என வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் வழியாக தான் செல்லும் நிலை உள்ளது.




கோவில்பட்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது புதிய பேருந்து நிலையம். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், கோவை, திருச்சி, சென்னை என புற நகர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும் வகையில் மொத்தம் 52 பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.




இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, "தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக பெரிய ஊர் கோவில்பட்டி. விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது.  இந்த பேருந்து நிலைய கட்டிடம், கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான இடம், என்றாலும் இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்டது. தேர்தலில் ஓட்டுக்காக மக்களிடம்  கொடுத்த வாக்குறுதிப்படி  அவசரகதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையாக அனுமதியே பெறவில்லை.  இது ஒருபுறம் இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்க அனுமதியே கிடையாது.




புதிய பேருந்து நிலையம் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஏதும் நகராட்சி நிர்வாக கோப்பில் இல்லை என்பதை நகராட்சி நிர்வாகமே எனக்கு ஆர்.டி.ஐயில் பதில் கூறியுள்ளது. இதை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், எந்த பலனுமில்லை. மின் விளக்குகள் இருந்தும் இரவு நேரங்களில் ஒரு மின் விளக்கு கூட எரியாததால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.  இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், விரும்பத் தகாத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளது.




பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வராமல் தேசிய நெடுஞ்சாலை அல்லது சர்வீஸ் சாலையில் தான் பயனிகளை இறக்கி செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. பயணிகளும் மழை வெயில் என நடுரோட்டில் நிற்கும் நிலையில் தான் உள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து விற்பனையும் ஜோராக நடக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்டதால் பேருந்து நிலையம் செயல்படாமல் மூடப்பட்டது என்பது ஒருபுறம் இருந்தாலும் எந்த கட்சியின் ஆட்சியும் பேருந்து நிலையத்தை இயக்க முன்வரவில்லை. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம்" என்கின்றார்.




ஆனாலும் இதுகுறித்து கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிலால் விடுதாக.. ஆனால் இங்கிட்டு இருந்து அங்கிட்டு க்ராஸ் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துடும், லைட் கிடையாது, வேகமாக செல்லும் பஸ்ஸில அடிப்பட்டு போகத்தான் செய்யனும் எனக்கூறும் பயணிகள், சட்டுபுட்டுன்னு இந்த பஸ்ஸ்டாண்டுக்குள்ள பஸ்ஸை வர ஏற்பாடு செஞ்சா நல்லாருக்கும் என்கின்றனர்.