தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மணப்பெண்னின் பெயர் அந்தோணி திவ்யா என்று இருந்ததால் திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் மறுத்ததால் ஆலயத்தின் வெளியே வைத்து நடைபெற்ற திருமணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.




தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கண்ணன். இவருக்கும் தருவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் அந்தோணி திவ்யா என்பவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு தூத்துக்குடி சிவன் கோயில் முருகன் சன்னதியில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.




இதைத்தொடர்ந்து மணமக்களின் பெற்றோர்கள் தூத்துக்குடி பாகம்பிரியால் உடனுறை சங்கரராமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருக்கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது மணமகன் மற்றும் மணமகளின் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆவணங்களில் மணமகன் மற்றும் மணமகளின் ஆவணங்கள் அனைத்திலும் இந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகளின் பெயருக்கு முன்பாக கிறிஸ்தவ பெயரான அந்தோணி என்று இருந்ததாலும் மணமகளின் கல்வி சான்றிதழில் கிறிஸ்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாலும் திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் ஆலயத்திற்குள் திருமணம் நடத்த முடியாது உள்ளே திருமணத்திற்கு அனுமதி கிடையாது என்று மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் உரிய ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தால் மட்டுமே திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.




இந்நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்த மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து உள்ளே திருமணம் செய்ய வந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் ஊழியர்கள் பூசாரிகள் இங்கே உள்ளே திருமணம் செய்யக்கூடாது என அனுமதி மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் முன்னிலையில் ஆலயத்திற்கு வெளியே மணமகன் கண்ணன் மற்றும் மணமகள் அந்தோணி திவ்யாக்கு உறவினர்கள் முன்னிலையில் வாழ்த்து கூற திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மணமகளின் மற்றும் மணமகனின் உறவினர்கள் கூறுகையில், அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் பெயரில் அந்தோணி என்ற கிறிஸ்தவ பெயர் மணமகள் பெயருக்கு முன்பாக இருந்ததால் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் அனுமதி மறுத்துள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.மணமகள் பெயருக்கு முன்பாக கிறிஸ்தவ பெயர் இருந்ததால் மணமகன் மற்றும் மணமகளை திருமணம் செய்ய ஆலயத்திற்குள் அனுமதிக்காத சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது