சூரசம்ஹாரம் நிகழ்வை பார்க்க, சென்னை உள்பட பல இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பலரும் வருகை தருவார்கள். அவர்களுக்கு ஏதுவாக பல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூர் வருவதற்கும், திருச்செந்தூரில் இருந்து இந்த ஊர்களுக்கு செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி விரதம் நேற்று 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் அக். 27ஆம் தேதி சஷ்டி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும்.
முருகன் கோவில்களில் பல இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம்தான் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்தும் பொது மக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி அதிகமானோர் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வரும் திங்கள் (அக். 27) அன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஞாயிறு அன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதனடிப்படையில் வரும் அக். 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு மற்றும் திருச்செந்தூரில் இருந்து அக். 27ஆம் தேதி அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மேற்கூறிய இடங்களில் இருந்து திருச்செந்தூர் வருவோருக்கும், திருச்செந்தூரில் இருந்து மேற்கூறிய இடங்களுக்குச் செல்ல www.tnstc.in இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யலாம். TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.