நிதிநிலை அறிக்கை தேசத்திற்கான நிதிநிலை அறிக்கையா? ஆந்திரா பீகாரருக்குமான நிதிநிலை அறிக்கையா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.




தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகர், தெற்கு, வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி, புது கிராமத்தில் உள்ள ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ்முன்னிலை வகித்தனர்.




இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”மத்தியில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிதிநிலை அறிக்கை தேசத்திற்கான நிதிநிலை அறிக்கையா? ஆந்திரா பீகாரருக்குமான நிதிநிலை அறிக்கையா? என்பதை நிதி அமைச்சர் சொல்ல வேண்டும். நிதிநிலை அறிக்கை என்பது யூனியன் கவர்மெண்ட் ஒன்றிய அரசு போடும் போடுகின்ற நிதிநிலை அறிக்கை, ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை ஆந்திர பிரதேசத்திற்கும், பீகாருக்கும் எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்பது தெரியவில்லை. இதைத்தான் சந்தர்ப்பவாதம், பாசிசம் என்கின்றோம்.. மோடி ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆதரவு அளித்ததின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிதியை எடுத்து இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் கொடுப்பது என்ன நியாயம். இதைத்தான் பாசிச ஆட்சி என்று கூறுகின்றோம். இவர்கள் யாரையும் பொருட்படுத்த மாட்டார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியை தற்காலிகமாக தற்காத்துக் கொள்வதற்காக இப்படிப்பட்ட பெரிய தவறை நிதி அமைச்சகம் ஒன்றிய அரசு செய்திருக்கின்றது. காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.




1,5000 கோடி மழைக்கால வெள்ள நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 15,000 கோடி தமிழ்நாடு கிடையாது, புதுச்சேரி கிடையாது. கடந்த டிசம்பர் மாதம் தென் தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நயா பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது ஒன்றிய அரசு, தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நரேந்திர மோடி தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கின்றார்.. தமிழ்நாட்டில் ஏன் ஓர வஞ்சம் காட்டுகின்றார். மக்களை திரட்டி போராட்டத்தை முதலமைச்சர் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.




காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கை மதுவிலக்கு வேண்டும் என்பது, பூரண மதுவிலக்கு என்பது எங்கள் கொள்கை. மின் கட்டணம் எதற்காக உயர்ந்து இருக்கிறது மின்சார வாரியம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது உதய்மின் திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையொப்பமிட மறுத்தார்.. காரணம், தமிழ்நாட்டின் உரிமை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும் என,  ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் கையெழுத்திட்டனர்.. இதனை ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது.. தமிழ்நாட்டு மக்களுக்கு சுமை வைக்கக்கூடாது ஆகவே, அதனை திரும்ப பெற வேண்டும்.




தமிழக அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ள கருத்து குறித்து கேட்டபோது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது  பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கிறது. அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். ஆனால் இதனை தீர்மானிப்பது டெல்லி தலைமை தான், தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தீர்மானிப்பார்” என்றார்