கேரள, குளச்சல் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக நீடித்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கேரளா மற்றும் குமரி மாவட்ட விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 19-ம் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரளா மற்றும் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் 86 பேரையும், 6 படகையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், படகுகளை விடுவிக்க தூத்துக்குடி மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். படகுகளை தந்தால் மட்டுமே புறப்பட்டுச் செல்வோம் என்று கூறி, கேரளா மற்றும் குளச்சலைச் சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்தனர். இதனால் 6-வது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் திரண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.




பின்னர் சங்க அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார் திடீரென சங்க செயலாளர் போஸ்கோ என்பவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இதனை அறிந்த விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் போஸ்கோவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு கடற்கரை சாலையில் மீன்பிடி துறைமுகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து சாலை மறியல் நீடித்தது. இதானல் மீன்பிடி துறைமுக வளாகம், கடற்கரை சாலை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.




பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி மீனவர்கள், நாங்கள் கடலுக்கு செல்லும் போதே கேரளா மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடிக்கின்றனர். மீன்பிடி தடைக்காலங்களில் முழுமையாக வந்து மீன்பிடித்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கும் தங்குகடல் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும், செயலாளர் போஸ்கோவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, அமைச்சர் கீதாஜீவன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.




இதனை தொடர்ந்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு கனிமொழி எம்பி தலைமையில், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் மீனவர்கள் படகுகளை விடுவிக்க ஒப்புக் கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த மீனவர்கள், படகுகளின் சாவிகளை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு கேரளா, குளச்சல் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஊருக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் 6 நாட்களாக நீடித்த வந்த மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.