தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கடாட்சபுரம் கிராமம் இந்த கிராமத்தில் வசித்து வருப்பவர் ஞானராஜ். இவர் ஆடு, மாடு வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம்  போல இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒரு ஆடு மட்டும் காணாமல் சென்றுள்ளது. அதை காட்டுப்பகுதியில் தேடிய போது அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆடு தொடர்ந்து அலறிக்கொண்டு இருந்தது. ஞானராஜ் எவ்வளவோ முயற்சித்தும் ஆட்டை மீட்க முயற்சித்து முடியாததால் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.


தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறை வீரர்கள் ஆட்டினை மீட்கும் முயற்சியினை மேற்கொண்டனர். அந்த ஆழ்துளை கிணற்றில் உள்ளே கயிறை கட்டி ஆட்டை மிட்க்க முயற்சித்தும் முடியாத காரணத்தால் தீயணைப்பு வீரர் துரைசிங்கத்தை இடுப்பு மற்றும் காலில் கயிறை கட்டி மற்ற வீரர்கள் அருகில் நின்று கயிறை பிடித்துக் கொண்டனர்.  தீயணைப்பு வீரர் துரை சிங்கத்தை தலைகீழாக அந்த சிறிய ஆழ்துளை கிணற்றில் இறக்கி விட்டனர். அப்போது அவர் தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் உள்ளே முழுமையாக சென்று அங்கு உயிருக்கு போராடிய ஆட்டை பத்திரமாக கையால் பிடித்தபடி வெளியே வந்தார். தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர் குறித்து சாத்தான் குளத்தில் பரவலாக பேசப்படுகின்றது. 


சாத்தான் குளத்தில் மற்றொரு சம்பவம்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன் என்பவரின் குடும்ப வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் வீட்டிற்கு சென்றதும் பேராசிரியர் ராமச்சந்திரனின் குடும்ப உறவினர் பெண் ஒருவரின் 1 1/2 பவுன் செயின் நிகழ்ச்சி நடந்த அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் திருமண மண்டப நிர்வாகியான அந்தோணி ராஜ் என்பவரிடம் கூறியுள்ளார். அதன் பேரில் மண்டபத்தில் பணியாளராக வேலை செய்யும் மூதாட்டி பாலசுந்தர் என்பவரின் மனைவி அந்தோணியம்மாள் என்பவரிடம் செயின் தவறவிட்டது தொடர்பாக மண்டப நிர்வாகி அந்தோணிராஜ் கூறியதன் பேரில் மண்டபம் முழுவதும் தேடிய அந்தோணியம்மாள் மண்டபத்தில் நாற்காலிகள் அடுக்கி வைத்திருக்கும் இடத்தின் அருகே செயின் இருந்ததை கண்டுபிடித்து அதனை மண்டப நிர்வாகி அந்தோணி ராஜ் மூலம் சாத்தான்குளம் டிஎஸ்பி அருளிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது. 


 தவறவிட்ட 1 1/2 பவுன் செயினை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், மூதாட்டி அந்தோணியம்மாள் மூலமாக செயினை தவறவிட்ட பேராசிரியர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார். அப்போது செயினை வாங்கிக் கொண்ட பேராசிரியர் ராமச்சந்திரன் தனது செயினை பத்திரமாக தேடி கண்டுபிடித்து நேர்மையுடன் ஒப்படைத்ததை பாராட்டும் விதமாக 10,000 ரூபாய் பணத்தை மூதாட்டி அந்தோணியம்மாளுக்கு டிஎஸ்பி அருள் மூலமாக பரிசாக கொடுத்தார்.