திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை தொடர்கிறது. இரண்டாவது முறையாக சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கும் அபாயம்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, இதேபோன்று காரைக்கால், புதுச்சேரி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பத்து தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருந்தன. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் கனமழையால் பயிர் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதுமாக கடந்த மூனறு தினங்களுக்கு முன்பு ஆய்வு பணியில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கையை நேற்றைய தினம் முதல் அமைச்சரிடம் சமர்ப்பித்தது அதனடிப்படையில் அறுவடைக்கு தயாரான குருவை நிற்பவர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரமும் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களுக்கு உர நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.



இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டு வயல்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய தொடங்கியது. இதனால் கூடுதல் உரம் கொடுத்து சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களைப் பாதுகாத்து விடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அதி கன மழையும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கன மழையும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை நன்னிலம் குடவாசல் திருவாரூர் வலங்கைமான் நீடாமங்கலம் மன்னார்குடி கோட்டூர் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.



ஏற்கனவே பெய்த மழையால் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவில் பாதி அளவிற்கு அழியும் அபாயத்தில் உள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதாது என விவசாயிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று பெய்துவரும் தொடர் கனமழையால் இரண்டாம் முறையாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இரண்டாம் முறையும் பயிர்கள் மூழ்கினால் அதனை காப்பாற்ற முடியாது என்றும் தங்களது வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்று விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.