அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் ரத்த்டு செய்யப்படுவதாகவும் 100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வாயிலாக மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிகப்படுவார்கள் எனவும், இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும்  கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தெரிவித்துள்ளார்.

  




திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ரூ.250 சிறப்பு கட்டணம் தரிசனம், ரூ.100, ரூ.20 ஆகிய கட்டண தரிசனமும், பொதுதரிசனம் என நான்கு வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில் ரூ.250 மற்றும் 100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பல்வேறு வகையில் பக்தர்கள் சிரமப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின் அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்தில் சில மாற்றங்களை கோயில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. 




இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவுபடியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சில நடைமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி  இக்கோயிலில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 250 ரூபாய் கட்டணம்,  20 ரூபாய் கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது.  100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும். இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.





கோயிலில் திரிசுதந்திரர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதே போல் கோயில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை போலீசார் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் இன்று முதல் ஈடுப்பட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது.




விஐபி தரிசனத்துக்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோயிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்ல கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் என்றார்.