மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் சங்கம் சார்பாக கே.பி.எஸ். மணி நூற்றாண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சிலம்பாட்ட குழுவினர் சார்பில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித், பொதுச்செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி சிந்தனை செல்வன் முன் சிலம்பம்  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமூக போராளி கே.பி.எஸ். மணி குறித்து புத்தகம் மற்றும் போராளித்தலைவன் கே.பி.எஸ்.மணி என்ற பாடல் வெளியிடப்பட்டது. 




தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், ”தனித் தொகுதியில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தனித்தொகுதிக்கு தேவையான எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை, திமுகவை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தனித்தொகுதி என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, பின்னர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் பதவியை பெற்ற பின்னர், நாங்கள் ஒரு சாதியினருக்கு மட்டும் நாங்கள் அமைச்சர் இல்ல, எங்கள் அரசு சமூக நீதிக்கான அரசு  சமூகநீதிக்கு பொதுவான அமைச்சர் என கூறுவது எதற்கு? ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பட்டம் ஏன்?  என கேள்வி எழுப்பினார், தனித்தொகுதி தேவையான அனைத்து திட்டங்களையும் செய்யாமல் இருப்பது ஏன்? எனவும் கேள்வி கேட்டார். இந்நிகழ்ச்சியில் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




கே.பி.எஸ். மணி என அறியப்படும் கதிர்வேல் பால சுப்பிரமணி என்பவர் முன்னாள் ராணுவ வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும்,1967 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அவர் 1957 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த முத்தையா பிள்ளையைப் போல இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற ஒருவராகவும் இருந்தவர். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1980-ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.




இராணுவத்தில் இருந்து திரும்பிய இவர் உள்ளூரில் நிலவிய சாதிய, பண்ணையார் ஆதிக்கம் போன்றவற்றிற்கு எதிராக செயல்படத் தொடங்கினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போரட்டங்களினால் 1947-ஆம் ஆண்டில் இருந்து 1967 வரை 4 முறை சிறை சென்றார். பட்டியல் சாதியினர் பிணத்தை எடுத்துச்செல்லும்போது, யாரேனும் வழிமறித்தால், பிணத்தை அதே இடத்தில் எரிப்பேன் என கே.பி.எஸ். மணி சொன்னதால், எடமணலில் தடுத்தவர்களே பிணத்தைப் புதைக்க வழிவிட்டனர். இத்தகைய பல்வேறு சமூக போராளியாக கே.பி.எஸ்.மணி திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.