தஞ்சாவூர்: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தலைப்புச் செய்தியாக வந்தால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் செய்தி காணாமல் போய்விடும் என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை என காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.


தஞ்தாவூர் அருகே செங்கிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் ஜனநாயக மரபுபடி  எப்படி  நியமிக்கப்பட வேண்டும், ஆனால் அப்படி எந்த வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படவில்லை. முதலில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் அரசின் 2 அமைச்சர்கள் மட்டுமே இருந்து தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பது என்பது நியாய, தர்மத்துக்கும் உட்படாத ஒரு ஏற்பாடு.




 


உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான வழக்கு விசாரணைக்கு வருகிறது என்ற உடனேயே, அவசர அவசரமாக அந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.


அதிலும், காங்கிரஸ்  பாராளுமன்ற தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஆதிரஞ்சன் சவுத்ரிக்கு முறையான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. யாருடைய பெயர்கள்  பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது, அவர்களுடைய தகுதிகள் என்ன இதுபோன்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை.


கூட்டம் நடப்பதற்கு 10 மணி நேரத்துக்கு முன்பு சில பெயர்களை கொடுத்து விட்டு அவர்களை கூட்டத்துக்கு அழைத்துள்ளனர். அவர்களால் கூட்டத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இந்த சூழலில் இன்று தேர்தல் பத்திர நன்கொடை தகவல்கள் வந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை இப்படிப்பட்ட  மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதில்லை.


வழிப்பறி கொள்ளை


அரசே ஒரு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதை போல, மிகப்பெரிய தொழில் அதிபர்களை மிரட்டி, வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை,  சிபிஐ, வருமானவரித்துறையை ஏவிவிட்டு அவர்களின் வீடுகளில் சோதனை செய்து, கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில்  சோதனை நடைபெறும் அதே நேரத்தில், அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை வசூலித்திருப்பது ஒரு வழிப்பறி கொள்ளையை விட மோசம்.


அப்படிப்பட்ட மோசமான செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என்பது கண்டிக்கதக்கது. இதற்கு பொறுப்பேற்று மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த காலங்களில் மிக சாதாரணமான செயல்களில் எல்லாம் மன்மோகன்சிங் அரசை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் கேட்டார்கள், இப்போது இந்தியா வரலாற்றில் இல்லாத கொடுமை நடந்துள்ளது.


விலை ஏற்றுவதும் குறைப்பதும் கை வந்த கலை


தேர்தல் வரும்போது எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்பது பாஜகவுக்கு வாடிக்கையான ஒன்று,  தேர்தல் பத்திரங்கள் குறித்து செய்திகள் தலைப்புச் செய்திகளாக வருவதால், அந்த தலைப்புச் செய்தியை திருடிக் கொள்ளவே பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு என அறிவித்துள்ளனர். தேர்தல் வரும்போது பெட்ரோல் விலையை குறைப்பதும், தேர்தல் முடிந்ததும் விலையை கூட்டுவதும் பாஜகவுக்கு கைவந்த கலை.


அந்த 2 ரூபாய் விலை குறைப்பு என்பது தலைப்பு செய்தியாக வந்தால், தேர்தல் பத்திரங்களைப் பற்றிய செய்திகள் சிறிய செய்திகளாகி விடும் என எதிர்பார்த்தார்கள்.  ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கு மீறி, பல தலைப்புச் செய்திகளாகி, இந்தியாவினுடைய ஆன்மாவையே தட்டிக் கேட்கும் செய்தியாக வந்துள்ளது.


பிறமாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக நிற்கும் கட்சிகள் வெற்றி பெற்றால், அந்த வெற்றி இண்டியா கூட்டணி வெற்றியாக தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.