தஞ்சாவூர்: சூரிய பூஜை நடக்கும் கோயில் பற்றி தெரியுங்களா. நீங்களும் சூரிய பூஜையை பார்க்கணுமா. பங்குனி மாதம் வரைக்கும் காத்திருங்க. அதுக்கு முன்னாடி அது என்ன ஸ்தலம் என்று படிச்சு வைச்சுங்கோங்க.

Continues below advertisement

ஆண்டுதோறும் பங்குனி 18,19,20ம் தேதிகளில் சூரியன் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்யும் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.  தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது மேல உளூர் கிராமம். இதன் அருகேதான் இக்கோயில் உள்ளது. கோயில் பெயர் பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 101வது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

Continues below advertisement

1500 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையான இக்கோயிலில்தான் சூரியன் பூஜை செய்யும் நிகழ்வு நடக்கிறது. பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு அந்நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்று அருள்புரிகிறார். 

சூரியனும் அதனை அப்படியே செவ்வனே செய்ய நோய் நீங்குகிறது. மனம் மகிழ்கிறார் சூரியன். இதனால்தான் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்திற்கு மற்றொரு சிறப்பான வரலாறும் இருக்கு. அது என்ன தெரியுங்களா? அதையும் தெரிந்து கொள்ளுங்கள். ராமபிரானின் முன்னோர்களான சூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டார். அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியால் இளைப்பாறினார்.

அப்போது குதிரைச்சேவகன் குதிரைக்கு உணவாக புல் சேகரிக்க முயன்றபோது அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. ஆயுதம் பட்டதால்  லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அந்த சேவகன் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்து தனது தலைவனிடம் கூறுகிறார். உடனே இந்த தகவல் மன்னருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டார். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. ஆச்சரியத்துடன் அதை பார்த்த மன்னர் உடனே அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டார்.

இதைநினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினார் மன்னர். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரியகுல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான் என்பதும் மிகவும் குற்பபிட வேண்டிய ஒன்றாகும்.

தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலம் இருக்கிறது.

தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் சடையார்கோயில், பொன்னாப்பூர் வழியாக பரிதிநியமம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாடுக்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இக்கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். பங்குனி மாதம் வாங்க... அற்புதமான சூரிய பூஜையை மனதார பார்த்து அருள் பெறுங்கள்.