தஞ்சாவூர்: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.


நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தலைமை அலுவலகம் தெரிவித்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.


இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. தமிழகம் முழுவதும் விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதபடி சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர்.


அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிளக்ஸ் மற்றும் போட்டோ வைத்து அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தஞ்சை பர்மாகாலனியில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் உருவபடத்தை வைத்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணைச் செயலாளர் வசந்த் பெரியசாமி, கேப்டன் மன்ற செயலாளர் விஜயகுமார், 39வது வார்டு செயலாளர் பாண்டி, புதுப்பட்டினம் ஒன்றிய செயலாளர் ராஜா, மணி, சுரேஷ், முருகன், திமுகவை சேர்ந்த பாலமுருகன், சுரேஷ் மற்றும் பலர் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராகி ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் மதிப்பு பெற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் தஞ்சையின் பல்வேறு பகுதிகளிலும் விஜயகாந்த் உருவப்படம் மற்றும் பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பகுதியில் ராமானுஜபுரம் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருக்கும்போதே அவரது குடும்பம் திருமங்கலத்திற்கு இடம்பெயர்ந்தது. இயற்பெயர் விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்த் என்று கொண்டார். இவரது மனைவி பிரேமலதா. மகன்கள்: விஜய பிரபாகரன் - சண்முக பாண்டியன்.


விஜயகாந்த் தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள தி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியிலும், மதுரையில் உள்ள நாடார் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயகாந்த் அதன்பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.


படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால் சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு 1979ல் இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடக்கினார்.  1980ல் வெளிவந்த 'தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்தார். 1981ல் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்தவர் விஜயகாந்த்.