நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க தொடங்கி 29 வருடங்கள் நிறைவடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உடல் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனக்கு தனது உடலை தானம் செய்தார்.  விஜய் ரசிகரின் இச்சம்பவம்

  நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஆதி.ராஜாராம். இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் பட்டுக்கோட்டை நகரத் தலைவராக உள்ளார். விஜய் மீதுள்ள ஆர்வத்துடன் தொடர்ந்து அப்பகுதியில் சமூக செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். கூலி தொழிலாளி ஒருவரின் மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி உறுதுணையாக இருந்ததால் அந்த சிறுவன் தற்போது நல்ல நிலையில் இருப்பது  குறிப்பிடத்தக்கது.




விஜய் சினிமாவில் நடிக்க தொடங்கி 29 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. விஜய் ரசிகர்கள் சில தினங்களாகவே இதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதனை கொண்டாடும் வகையில், கோயில்களில் சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். சில ரசிகர்கள் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விஜயின் சினிமா பயணத்தை வரவேற்கும் விதமாக ஆதி.ராஜாரம்  தனது உடலை தானம் செய்ய  நினைத்தார். அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீன் ரவிக்குமாரிடம் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை கொடுத்தார்.அதனை பெற்று கொண்ட டீன்  ரவிக்குமார், ஒரு கண் மூலம் இரண்டு பேருக்கு பார்வை தரலாம். ஒரு நபர் கண்கள் தானம் செய்தால் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும். உடல் தானம் செய்பவர்கள் உடலை ஆறு மணி நேரத்திற்குள் கொடுத்து விட்டால் கண்,தோல் என பல உறுப்புகளை எடுத்து பலரது வாழ்வில் மகிழ்ச்சியும், மாற்றமும் உண்டாக்கலாம். அதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டும் என்றால்  உடல் தானம் செய்ய பலரும்  முன்வரவேண்டும். ஆதி.ராஜாராமின்  செயல் வரவேற்கத்தக்கது. இது போல் பலரும் உடல் தானம் செய்ய முன் வர வேண்டும் என பாராட்டினர். முதுநிலை உதவி பேராசிரியர் காயத்திரி, பட்டய மேற்படிப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.




இது குறித்து ஆதி.ராஜாராம் கூறுகையில், நடிகர் விஜயின் எண்ணத்திற்கேற்ப மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். உடல் தானம் செய்தால் பலரது வாழ்வில் மலர்ச்சியை உண்டாக்கலாம். முக்கிய பொறுப்பில் உள்ள  நான்  உடல் தானம் செய்வதை பார்த்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிக சொந்தங்கள் பலரும் முன் வருவார்கள் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் விஜயின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாகவும்  உடல் தானம் செய்துள்ளேன் என்றார்.