தஞ்சாவூர்: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் செயல்பட்டு வருகிறது.


இரண்டு பெண் குழந்தை பிறந்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்த தேதியில் இருந்து 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச்சான்று அசல், குடும்ப கட்டுப்பாடு சான்றிதழ் அசல், ஆண்குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானம் ரூ.72000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இரண்டு பெண் குழந்தைகள் திட்டப் படிவம்


பெற்றோர்களின் TC, குழந்தைகளின் தாய் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதார் அட்டை 2 நகல்கள். தாயின் வங்கி கணக்கு எண், குடும்ப அட்டைநகல், குடும்ப புகைப்படம். முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டப் படிவத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்களுக்கு பயனாளர்கள் தங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதற்கான கூடுதல் விபரங்கள் தொடர்பாக அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் அணுகிடலாம்.


பணிபுரியும் மகளிருக்கான விடுதி தோழி
 
இதேபோல் தமிழ்நாட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பணிபுரியும் மகளிருக்கான விடுதி "தோழி" என்ற பெயரில் 2020-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த விடுதியானது பல்வேறு ஊர்கள், மாவட்டங்கள், மற்றும் வெளி மாநிலங்கள் இருந்து வந்து பணிபுரிபவர்கள், பயிற்சிக்காக வருபவர்கள், படிக்கும் மாணவர்கள், பணிநிமித்தமாக ஒன்று, இரண்டு நாட்கள் தங்கும் மகளிர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு முயற்சி ஆகும்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை ரோடு, மேலவஸ்தாசாவடி, தெற்கு தெரு என்ற முகவரியில் தோழி விடுதி 13.07.2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 60 படுக்கைகள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளது. மேலும் தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பெண் விடுதி மேலாளர், பாதுகாப்பு காவலர், 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் பயோமேட்ரிக் உள்நுழைவு வசதி உள்ளது.


மேலும் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி (RO Water). அயனிங் வசதி, வாஷிங்மெஷின் வசதி, கெய்சர் வசதி (water Heater), இலவச wifi வசதி, பார்க்கிங் வசதி மற்றும் 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். விடுதியில் 2 பேர் தங்கும் வசதி, 4 பேர் தங்கும் வசதி உள்ளது. உணவு கட்டணங்கள் தவிர்த்து 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு வாடகையாக மாதம் ரூ.3500/-ம். 4 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு வாடகையாக மாதம் ரூ.2500ம், என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது. இது விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான இல்லமாக செயல்படுகிறது.


விடுதியில் தங்கும் சேவையை பெற பயனர்கள் www.tnwwhcl.in என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளிடலாம் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.