திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வரும் ஏப்ரல் மாதம் செறிவூட்டப்பட்ட அரிசி ஒரு கிலோவுக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் கலந்து விநியோகம் செய்யப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க 112 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்பட உள்ளதாகவும் ஏற்கனவே தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இது நடைமுறையில் உள்ளதாகவும் இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்வதற்கு பதிலாக பாரம்பரிய நெல் அரிசி வகைகளை விநியோகம் செய்ய வேண்டும். குறிப்பாக செறிவூட்டப்பட்ட அரிசி என்பது 100 கிலோவுக்கு ஒரு கிலோ என்கின்ற விகிதத்தில் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு முறை என்பது விட்டமின் ஏ, B12 உள்ளிட்டவற்றை  செயற்கையாக அரிசியில் கலப்பதாகும் இதற்காக அரிசியை மாவாக அரைத்து அதில் விட்டமின்களை கலந்து அரிசி வடிவில் மீண்டும் செயற்கையாக செய்து அதனை பொது விநியோகத் திட்ட அரிசியுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.



 

பல்வேறு சத்துகள் ஒன்றாக கலந்து விநியோகம் செய்யப்படும் போது தேவையற்ற நபர்களுக்கு தேவையற்ற கூடுதல் சத்துக்கள் சேர்வதால் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது . இதை தவிர்த்து பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவித்து அந்த அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதன் மூலம், பாரம்பரிய நெல் சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும் அதே நேரத்தில் சத்தான அரிசி வகைகளையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ததாக அமையும். தமிழக அரசை பொறுத்தவரை பாரம்பரிய விவசாயத்தைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இத்தகைய செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்துக்கு மாற்றாக பாரம்பரிய நெல் சாகுபடி மூலம் கிடைக்கின்ற அரிசி ரகங்களை பொதுவுணியாகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுமாயின் சிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆகையால் எப்பொழுதும் போல் பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.