Just In





கிடுகிடுவென உச்சத்துக்கும் போகும்... சரசரவென்று பாதாளத்திற்கும் இறங்கும்: என்ன தெரியுங்களா?
தஞ்சைக்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சையில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் உற்சாகத்தோடு தக்காளியை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதே போல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்தது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகம் வர தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை அதிகம் இருந்தால் தஞ்சை மார்க்கட்டுக்கு 1300 முதல் 1500 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
அதுவே தக்காளி விலை குறைவாக இருந்தால் சுமார் 4500 முதல் 5000 பெட்டிகள் வரை தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சைக்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யபட்டது. பொங்கல் நேரத்தில் சற்று விலை குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனையானது. ஆனால் தற்போது தக்காளி வரத்து அதிகரித்தள்ளதால் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடைகளில் ஒலி பெருக்கி மூலம் கடைக்காரர்கள் 5 கிலோ ரூ.100 என கூவி கூவி விற்பனை செய்து வருகிறனர்.
மேலும் சிலர் லோடு ஆட்டோக்கள் மூலமும் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் அரை கிலோ, கால் கிலோ என வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது விலை குறைந்து ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மக்கள் 2 கிலோ 3 கிலோ என வாங்கி செல்கின்றனர்.
தக்காளி அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படும். சைவம் தொடங்கி அசைவம் என அனைத்து தரப்புக்கும் தக்காளி தான் முதன்மையாக இருக்கும். அதேபோல் உணவகங்களில் தக்காளி அதிகம் பயன்படுத்தப்படும். அதனால் தக்காளியிகன் தேவை அதிகம். மழை பெய்தால் தக்காளி விலை உச்சத்தை தொடும். தற்போது தக்காளி வரத்து அதிகம் உள்ளது. அதனால் விலை குறைந்துள்ளது. பொங்கலுக்கு முன்னாடி விலை உயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் குறைவாகவே வாங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.