கடல் சீற்றம், காற்று காரணமாக நாகை துறைமுகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி முழுவதும் சேதமடைந்தது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகு கயிறு அறுந்து கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியது.

 

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காட்டுத்துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தை சேர்ந்த  500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் அந்தந்த கடற்கரை பகுதிகளிலும் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



 

இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புயல் சின்னம் காரணமாக நேற்று இரவு கடுவையாற்றில் திடீரென ஏற்பட்ட காற்று மற்றும் வெள்ளப்பெருக்கால் துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த பிரகாஷின் விசைப்படகு மற்ற படகுகள் மோதி கயிறு அறுந்து கடலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. துறைமுக நுழைவு பகுதியில் கொட்டப்பட்டுள்ள கருங்கலில் மோதிய விசைப்படகு தூக்கி வீசப்பட்டு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலும் சேதம் அடைந்தது.



 

மேலும் படகில் இருந்த வலை டீசல் ஐஸ்பெட்டி உள்ளிட்டவைகளும் முழுமையாக சேதம் அடைந்தது. இன்று அதிகாலை தகவல் அறிந்து வந்த மீனவர்கள் படகை மீட்க போராடினர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நேரில் பார்வையிட வந்தனர். அப்போது அவர்களிடம் பாதிக்கப்பட்ட படகின் உறவினர்கள், மீனவ பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆறுதல் தெரிவித்தார். மீன் வளத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கூறிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என கௌதமன் உறுதி அளித்தார். கடன் பெற்று விசைப்படகு வாங்கி இருமுறை மட்டுமே கடலுக்கு சென்று வந்த நிலையில் வாங்கிய கடனை ஒரு ரூபாய் கூட செலுத்த முடியாத நிலையில் புயல் சின்னம் காரணமாக படகு சேதமடைந்த சம்பவம் கடற்கரையோர மீனவ கிராமங்களிடை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.