திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருமக்கோட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் வசிக்கக்கூடிய   பழங்குடியின (நரிக்குறவர்) மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் ஆன ஜாதி சான்றிதழ் மற்றும் தொகுப்பு வீடுகள் இலவச வீட்டு மனை பட்டா என பல்வேறு சலுகைகள் கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு நாள்தோறும் ஆளாகி வருவதாக அந்த மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களது வேதனைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார்குடி, நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் நரிக்குறவர் மக்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அரசு தொகுப்பு வீடுகள் என்பது கட்டித் தரப்பட்டன. இந்த நிலையில் 25 ஆண்டுகள் ஆன நிலையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரைகள் தற்போது இடிந்து விழுந்து வருவதால் வீட்டுமனை பட்டா உடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.




திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, பாமணி, மன்னார்குடி ரயிலடி, திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் நரிக்குறவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் வந்த  நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். நரிக்குறவர்கள் சர்வோதய சங்கம் என்ற பெயரில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சிக்காலத்தில் தொகுப்பு வீடுகள் நரிக்குறவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. கடந்த வாரம் திருமோட்டையில் தொகுப்பு வீடு இடிந்து இரண்டு பேர் சிறிய அளவில் காயமடைந்தனர். இதேபோல அனைத்து தொகுப்பு வீடுகளும் சிதலமடைந்துள்ளன. எனவே நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தொகுப்பு வீடுகளையும் சீரமைக்க வேண்டும், விரைவாக பட்டாவுடன் கூடிய புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்தனர். அதனை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை மனுவாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினர்.




இதேபோன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் காட்டூர், சித்தமல்லி, அம்மையப்பன் கொல்லுமாங்குடி, செல்லூர், வடபாதிமங்கலம், மாங்குடி, களப்பால், உள்ளிக்கோட்டை அக்கரைக்கோட்டகம் போன்ற இடங்களில் 500க்கும் மேற்பட்ட மலைக் குறவன் சமூகத்தை சார்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தங்கள் படிப்பை தொடர முடிவதில்லை எனவும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். தங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால் கல்வி உதவித்தொகை பெறுவதிலும் கல்லூரி படிப்பை தொடர்வதிலும் பெரும் சிக்கல் இருப்பதாகவும், இதனால் தங்கள் கல்வி கனவு கலைந்து போவதுடன் பெற்றோர்கள் தங்களை பன்னி மேய்க்க சொல்வதாகவும் பெண் குழந்தைகளை சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுத்து விடுவதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சீருடையுடன் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த 13 வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு தாங்கள் போராடி வருவதாகவும் அதிகாரிகள் எஸ்சி எம்பிசி பட்டியலில் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதாக கூறுவதாகவும் தாங்கள் பழங்குடியின மலைக் குறவன் சாதி என்பதால் தங்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தங்கள் உறவினர்கள் கடலூர் மாவட்டத்தில் வசிப்பதாகவும் அவர்களுக்கு எஸ்.டி சாதி சான்றிதழ் அங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மாவட்டத்தில் பலமுறை நாங்கள் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.