திருவாரூர் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை.

 






தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களை தவிர, வேறு யாரேனும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தால் அது சட்டப்படி குற்றச் செயலாகும் என தமிழ்நாடு அரசு அனைத்து போலி மருத்துவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் உத்தரவை மீறி திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக, போலி கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக வரும் புகார்களை அடுத்து, சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை சார்பில் அவர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, போலி மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் போலி மருத்துவர்கள் மாவட்டத்தில் இருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.






 

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

 

கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதனை மீறி போலி டாக்டர்கள் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயலாகும். போலி மருத்துவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு இழப்பீடுகளுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயல் கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர்கள் என கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது.

 

செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருத்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால், அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். எனவே கால்நடைகளுக்கான சிகிச்சைபெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுகவேண்டும். போலி மருத்துவர்கள் குறித்து தகவலை அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம். போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், ரூ.ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்