காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து அதன் மூலமாக கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை ஓஎன்ஜிசி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன், ஷெல் கேஸ் உள்ளிட்டவை எடுக்கக் கூடாது என தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக விவசாயிகள் போராடி வந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து புதியதாக ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்தாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் அருகே தியானபுரத்தில் இரண்டு இடங்களில் கிணறு அமைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் எரிவாயு ஆகியவை எடுத்து வந்த நிலையில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 




இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் ஓஎன்ஜிசி கிணறை திறந்து புதிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கனரக வாகனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்வதற்கான பொருட்களை நிர்வாகம் அங்கு எடுத்து வந்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் மீண்டும் ஒஎன்ஜிசி நிர்வாகம் இந்த பணிகளை தொடங்கக்கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது. இவர்கள் பணிகளை தொடர்ந்து நடத்தினால் எங்களுடைய விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படக்கூடும். ஆகையால் தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி ஓஎன்ஜிசி விவாகரத்தில் ஒற்றை நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.




ஏற்கனவே கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் மூடப்பட்ட எண்ணை கிணறை மீண்டும் திறந்து பணிகள் தொடங்குவதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் ஓஎன்ஜிசி துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆறு மாதத்திற்குள் பெரியகுடி பகுதியில் செயல்படும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் இந்த நிலையில் மீண்டும் ஓஎன்ஜிசி திருவாரூர் அருகே தியானபுரம்ம் பகுதியில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் மீண்டும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஓஎன்ஜிசி துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, புதிய எண்ணை கிணறுகள் அமைக்க மட்டும்தான் அனுமதி இல்லை. அதே நேரத்தில் பழைய பணிகளை மீண்டும் செயல்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.