திருவாரூர் மாவட்டம் அலிவலம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவருடைய பாட்டி மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரிடம் 80,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே அலிவலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜா, இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்து வருகிறார். இந்த சிறுமியின் பாட்டி ராணிக்கு பரவாக்கோட்டை பகுதியில் அதிக உறவினர்கள் இருந்து  வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த காமராஜ் (36) என்பவர் ராணியிடம் தனக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கும்படி கூறியுள்ளார்.



 

அதற்கு பாட்டி ராணி காமராஜிடம் 80,000 ரூபாய் பணத்தைப் பெற்று கொண்டு தன்னுடைய பேத்தியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளார். அதையடுத்து கடந்த 8ஆம் தேதி காமராஜிக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் காமராஜ் ஊரான பரவகோட்டைக்கு திருமணமான ஜோடிகள் சென்று வசித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக புகார் மனுவை அனுப்பி உள்ளனர். அதனை அடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதியான பரவாக்கோட்டைக்கு சென்று விசாரணை செய்ததில் சம்பவம் உண்மை என தெரிய வந்தது. அதனை அடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமி திருமணம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை திருமணம் செய்த காமராஜ் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பாட்டி ராணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.



 

இந்த விசாரணையில் பாட்டி ராணி காமராஜ் அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சிறுமியை திருமணம் செய்து வைத்ததாகவும், மேலும் அடிக்கடி பரவக்கொட்டைக்கு சென்று காமராஜிடம் பணம் கேட்டதன் அடிப்படையில் காமராஜிக்கும் ராணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து பாட்டி ராணி திருவாரூரில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்திற்கு பெயரில்லாமல் புகார் மனுவை அனுப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த காமராஜ், பாட்டி ராணி, சிறுமியின் தந்தை ராஜா, காமராஜின் மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் சகோதரி சசிகலா, ஆகிய 5 பேர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காமராஜ் மற்றும் பாட்டி ராணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது சொந்த பேத்தியை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.