காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிலையில் தண்ணீர் திறந்து 16 நாட்கள் ஆன நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஆற்றில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலில் குறைந்தளவு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் பாசன வாய்க்காலில் இன்ஜின் வைத்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.



 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்  முள்ளியாற்றின் தண்ணீரை நம்பி விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோட்டூர், திருப்பத்தூர், ராயநல்லூர், புழுதிகுடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறத்தாழ 7000 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு தெளித்து 15 நாட்கள் ஆகிறது. குறிப்பாக தற்போது வரை முள்ளியாற்றில் தண்ணீர் தரையோடு தரையாக செல்வதால் ஆற்றில் இருந்து பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் குறைந்தளவு தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கோட்டூர் பகுதியில் அடைப்பாறு பாசன வாய்க்காலில் இஞ்சின் வைத்து அங்கிருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சு வருகின்றனர். இதனால் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் கூடுதல் தண்ணீரை திறந்து முறை வைக்காமல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தண்ணீர் விட்டால் மட்டுமே குருவை சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இல்லை என்றால் தண்ணீர் திறந்தும் பயன் இல்லாத நிலை உருவாகும் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.