திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 23ஆம் தேதி இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் ஆடிய கலைஞர்கள் ஆபாசமாக ஆடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து கோவை அம்மன்நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நடன கலைஞர் நல சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் இதுகுறித்து இணையதளம் மூலம் புகார் செய்தார்.

 

அந்த புகாரில், நீதிமன்றம் உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலின் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 


மேலும் இந்த வழக்கில் கிராம நிர்வாகியான இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன்(65), நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த கோபிநாத்(31), ஆபாச நடனம் ஆடிய நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(26) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் மூவரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.