திருவாரூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை. கண்ணீரில் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்றும் புதுவை, காரைக்கால் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



மேலும் நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 10 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரி, சோளிங்கநல்லூர், மன்னார்குடி, உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வருகிற 13-ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 16-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக பலத்த காற்று வீச கூடுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக வெயில் அடித்து வந்த நிலையில் இன்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மன்னார்குடி, திருவாரூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மன்னார்குடியில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.



மேலும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் சாய்ந்துள்ளது. அதேபோன்று சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நாற்றுக்கள் மழையில் பாதிக்க கூடிய நிலை உருவாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்.