திருவாரூரில் ரயில்வே கீழ் பாலத்தில் ஆற்றுநீர் உட்புகுந்தது 10 கிராமத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதி.

 

திருவாரூர் அருகே கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற எந்த தேவையாக இருந்தாலும் திருவாரூருக்கு தான்  வர வேண்டும். இந்த பாதையில் இயக்கப்பட்டு வந்த பேருந்து பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைகளுக்கு திருவாரூர் வருவதற்கு கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த பாதையில் காட்டாற்று பாலம் அருகில் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி செல்லும் ரெயில்வே பாதையை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றிடும் வகையில் காட்டாற்று கரையில் சிமெண்ட் கான்கீரிட் தடுப்பு அமைத்து கீழ்பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் கரையில் கீழ்பாலம் கட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இருந்தபோதிலும் ரெயில்வே கீழ்பாலத்தை ரெயில்வே நிர்வாகம் 2.5 கேடி மதிப்பில் அமைத்து ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றியது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு காட்டாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இடும்பு உயரம் தண்ணீர் இருந்ததால் நடந்து செல்ல முடியாமலும், வாகனமும் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த பாதையில் போக்குவரத்து துண்டிப்பானது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காட்டாறு என்பது வடிகால் ஆறாக உள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் காட்டாற்றில் அதிக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் செல்லும் போது உடைப்பு ஏற்பட்டு இப்பகுதியில் வயல்கள் நீரில் முழ்கும். இந்த சுழ்நிலையில் ஆற்றின் கரையில் ரெயில்வே கீழ்பாலம் கட்டுவதால் தண்ணீர் புகுந்து ஆபத்தான நிலை ஏற்படும், மாற்று பாதை அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி மனு அளித்தும் பயனில்லை.



இந்நிலையில் காட்டாற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட சில நாட்கள் ஆன நிலையில் ரெயில்வே கீழ்பாலத்தில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சுமார் 3 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாதையில் யாரும் கடந்து செல்ல முடியாத நிலையில் பாதை துண்டிப்பானது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரெயில் தண்டவாள பாதையில் தற்காலிகமாக மண்ணை கொட்டி வழிபாதையாக பயன்படுத்தி வருகிறோம். பாதுகாப்பற்ற பாதையில் மோட்டார் சைக்கிளில் மட்டுமே தள்ளி கொண்டு செல்ல முடியும். வேறு எந்த வாகன போக்குவரத்து செல்ல முடியாது. இதனால் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை உள்ளது. எனவே ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்கு பதிலாக மாற்று பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.