திருவாரூரில் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக  ஆர்ப்பாட்டம்.300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன


14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நாடு முழுதும் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதனடிப்படையில் தொழிற்சங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சாலை மறியல் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்ட நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பாக சுருக்குவதை கைவிட வேண்டும்,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும்,நூறு நாள் வேலையை 200 நாட்கள் ஆக உயர்த்தி, ஊதியத்தை 600 ஆக உயர்த்த வேண்டும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலையேற்றத்தை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், தொமுச,ஐக்கிய விவசாயிகள் முன்னணி,மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.




நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்களின் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றனர்.


முதல்நாளான நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 50 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியானது. இதனையடுத்து தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று நேற்று அறிவித்திருந்தது.


மாநில தொழிற்சங்கங்க தலைமையின் அறிவுறுத்தலின்படி மாவட்ட அளவிலான சங்க பொறுப்பாளர்கள் தவிர மற்ற அனைவரும் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர். குறிப்பாக தொ.மு.ச வை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் தவிர மற்ற அனைவரும் பணிக்கு  திரும்பி உள்ளனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. 




நேற்று குறிப்பாக சிஐடியு ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்ந்த ஒருவர்கூட பணிக்கு வராத காரணத்தினால் திருவாரூரில் 55% பேருந்துகள் மட்டுமே இயங்கின.இந்த நிலையில் இன்று தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதால் இன்று காலை நிலவரப்படி இருநூற்று ஒரு பேருந்துகளுக்கு 198 பேருந்துகள் இயங்கி வருவதாக போக்குவரத்து கழக திருவாரூர் மாவட்ட மேலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.