கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியதிலிருந்து டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று முதல் 30-ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.



இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் சிறிதளவு மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழையின் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 

திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூரில் 76.7 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 31.8 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில்  68.2 மில்லி மீட்டரும், குடவாசலில் 49.6 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 46.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 53.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 40.2 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 87.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.



மேலும் தொடர் கனமழையின் காரணமாக நீடாமங்கலம் கோட்டூர் மன்னார்குடி உள்ளிட்ட கிராமங்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் அருகே குவளைக்கால் மூங்கில்குடி உள்ளிட்ட கிராமங்களில்  வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது.

 

இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்தநிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் வடகிழக்கு பருவமழை தொடர்பான  அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.