திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது கனமழை. ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்.

 

அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பொழியும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.



இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழைபெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் சிறிதளவு மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூரில் 49.6 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 50.4 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 26.4 மில்லி மீட்டரும், குடவாசலில் 30.2 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 16.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 20.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 17.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.



நாளை முதல் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் அருகே வெங்காயம் பேரையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதுமாக மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கு நாளை மாணவர்கள் வர வேண்டியுள்ள நிலையில் மழைநீரை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக  பாலையூர் மாவூர் உள்ளிட்ட கிராமங்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் அருகே குவளைக்கால் மூங்கில்குடி உள்ளிட்ட கிராமங்களில்  வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 

அதேபோன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது இங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் போக்குவரத்து பணிமனை அலுவலகத்திற்குள் மழைநீர் உட்புகுந்த காரணத்தினால் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர் உடனடியாக மழைநீர் அகற்றுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வழிகளை முழுமையாக தூர்வாரி மழை நீரை வடிய வைத்துள்ளது.