திருவாரூரில் மழை நீரில் சாய்ந்த 25 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் - விவசாயிகள் கவலை

கனமழையின் காரணமாக மாவூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் முற்றிலுமாக சாய்ந்துள்ளன

Continues below advertisement

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவமழை பொய்த்துப் போனதன் காரணத்தினாலும் விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டதன் காரணத்தினால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்கூட்டியே சாகுபடி பணிகளை தொடங்கியதால் தற்பொழுது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement


இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் முற்றிலுமாக சாய்ந்துள்ளன. இதனால் நெல் பயிர்கள் மழை நீரிலே முளைக்கத் தொடங்கியுள்ளன. மேலும் விவசாய நிலத்தில் அறுவடை இயந்திரம் இறங்க முடியாத காரணத்தினால் மிகப் பெரிய அளவில் குறுவை நெல் பயிர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத சூழலில் நிவாரணமும் வழங்கவில்லை என்றால் அடுத்த கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாது என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில்  நேரடி விதைப்பிலும்  நடவு முறையில் சாகுபடி பணிகள் தொடங்கியும் 25 நாட்கள் ஆன நிலையில் வயல்களில் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதற்கு கிராமப்புறங்களில் உள்ள சிறுகுரு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் அழுகிவிடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola