திருவாரூர்: விபத்தில் உயிரிழந்தவருக்கான ரூபே ஏடிஎம் கார்டுக்கான காப்பீடு தொகையை தர மறுத்த இந்தியன் வங்கி மற்றும் டாடா ஏ.ஐ.ஜி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

 

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட ஐ.பி கோவில் மேல தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் வயது 72. இவர் திருவாரூர் நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். மாத ஊதியம் மற்றும் பென்சன்  தொகையினை இந்த வங்கி கணக்கின் மூலம் பெற்று வந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் கடந்த 22.09.2020 இல் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தியாகராஜன் 7.10.2020 இல் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் உயிரிழந்த தகவலை வங்கிக்கும் திருவாரூர் நகராட்சி அலுவலகத்திற்கும் அவரது மனைவி மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வங்கிக்கு சென்று வரும் போது தனது கணவரின் ரூபே ஏடிஎம் கார்டுக்கு விபத்தில் உயிரிழந்ததற்கான இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு தொகை உள்ளது என்பது வங்கியின் மூலம் அவருக்கு தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து மகேஸ்வரி  இந்த காப்பீடு தொகையை பெறுவதற்காக இந்தியன் வங்கி கிளையில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த 2018 முதல் விபத்தில் உயிரிழந்தவர் 45 நாட்களுக்கு முன்பு ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை கூறி அவருக்கு காப்பீடு தொகையை தர மறுத்துள்ளது.

 

இதனையடுத்து மகேஸ்வரி இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் என்பவருக்கு எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜெயராமன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத் தரப்பிலிருந்து இன்சூரன்ஸ் பாலிசியில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்காமல் இருந்தது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் எதிர் தரப்பினர் திருத்தம் செய்யப்பட்ட நிபந்தனைகள் குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்காத காரணத்தினால் இந்த நிபந்தனைகள் புகார்தரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று இந்த ஆணையம் கருதுகிறது.

 

மேலும் கடந்த 05.05.2020ஆம் தேதிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் திருத்தத்திற்கு முன்னதாக இருந்துவந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி புகார் தாராரின் கணவர் இறப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பு ஏடிஎம் கார்டு மூலம் பல தடவை பண பரிவர்த்தனை செய்துள்ளதால் புகார் தாரருக்கு எதிர் தரப்பினர்கள் காப்பீடு தொகையான இரண்டு லட்சத்தை கொடுக்க கடமைப்பட்டவர்கள் என இந்த ஆணையம் கருதுகிறது. எனவே புகார்தாரருக்கு திருவாரூர் நேதாஜி சாலை இந்தியன் வங்கி கிளை மற்றும் மும்பையில் உள்ள டாடா ஏஐஜி நிறுவனம் ஆகியவை சேர்ந்தோ தனித்தோ காப்பீடு தொகையான 2 லட்சம் ரூபாயை தர வேண்டும் எனவும் புகாதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.