திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் கோமதி தம்பதியினரின் ஒரே மகன் சுரேஷ் வயது 31. குணசேகரன் பின்ன வாசலில் மரவாடி வைத்து நடத்தி வந்தார். கடந்த 2014 இல் அவர் உயிரிழந்தார். சுரேஷ் 13 வயது வரை எல்லா குழந்தைகளையும் போல ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார். அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு நாள்அவரது கால்களை மடக்க முடியாத சூழல் என்பது ஏற்பட்டுள்ளது.

 

அடுத்த ஓரிரு நாட்களில் அவரது பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் இது பற்றி அவர் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவருக்கு மல்டிபிள் எக்ஸ்டா சோசிஸ் என்கிற அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் இந்த நோயின் காரணமாக உடலில் எலும்புகள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனையடுத்து கடந்த 2006ல் முதன்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். தொடர்ந்து 2011 ல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடது கால் மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்பு வலது காலை நீட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.



 

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வலது கை மூட்டில் எலும்புகள் வளர்ந்ததால் உணவருந்த கூட கையை தூக்க முடியாத நிலை என்பது ஏற்பட்டுள்ளது.அதேபோன்று எழுத முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலது கை மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து 2014 ல் இடது காலை நீட்ட முடியாமல் நடக்க முடியாமல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.இதற்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது.

 

அதனைத் தொடர்ந்து 2017ல் இடது கால் பாதத்தில் எழுப்புகள் வளர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து 2018ல் அதில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.இதில் ஓரளவு கால் நேராகி பிரச்சனை இல்லாமல் இருந்துள்ளது.

 

இதனையடுத்து 2019ல் வலது கால் மூட்டில் அசைவு இல்லாமல் வீக்கம் அதிகமாகி உள்ளது.அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் எலும்புகளை அறுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இவ்வாறாக அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதில் அவருக்கு ஏழு லட்சத்திற்கு மேலாக செலவு என்பது ஏற்பட்டுள்ளது. நான்கு அறுவை சிகிச்சைகளுக்கு அரசின் காப்பீடு திட்டம் மூலம் பாதி தொகை என்பது அவருக்கு கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில் சுரேஷின் மருத்துவ செலவுகளுக்காக அவரது அம்மா கோமதி பல இடங்களில் வட்டிக்கு வாங்கியும் குடியிருந்த வீட்டை அடமானம் வைத்தும் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். எலும்புகள் வெட்ட வெட்ட வளர்ந்து வருவதால் சுரேஷால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது அப்படியே வேலை கொடுத்தாலும் மூன்று மாதத்தில் அவரை வேலையை விட்டு அனுப்பி விடுகின்றனர். இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்து தாயின் சொற்ப மாத வருமானமான 3 ஆயிரம் ரூபாயில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.



 

இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்பதாவது அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வலது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வகை நோயால் திருவாரூர் மாவட்டத்திலேயே இவர் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.31 வயதான இளைஞரான  இவருக்கு தொடர்ந்து எட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீட்டை இழந்து வேலையிழந்து வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் நிலையில் உள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், மகன் சம்பாதித்து தாயை காப்பாற்றக்கூடிய காப்பாற்ற வேண்டிய நிலையில் எனது அம்மாவின் வருமானத்தில் நான்  நான் வாழ்வதை அவமானகரமாக கருதுகிறேன். நான் வாழ்வதை அவமானகரமாக கருதுகிறேன் என்று கூறினார். எனவே அரசு தனக்கு ஏதாவது உதவி செய்து தனது வாழ்வாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையிலும் கிளீனர் போன்ற சிறிய வேலைகளுக்கு சென்று தனது உடலை அவர் கவனித்து வருகிறார். இருப்பினும் நிரந்தரமான வேலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது மருத்துவத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தாயும் மகனும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.