திருவாரூர்: செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

உலகம் முழுக்க வானுயுர்ந்து நிற்கின்றன கட்டிடங்கள். நாள்தோறும் பல கட்டிடங்கள் முளைத்த வண்ணமுள்ளன. இத்தகைய கட்டுமான தொழிலில் மிகமுக்கியமானது செங்கல். சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. இந்த தொழிலில் மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.








 

மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களின் ஒன்றான திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை வகிக்கிறது. காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி சாகுபடி நடைபெறுவதால் சில இடங்களில் குறுவை சாகுபடியும், கோடை சாகுபடியும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே செய்துவருகின்றனர். தண்ணீர் பிரச்சினையாலும், இயற்கை இடர்பாடுகளாலும் விளைநிலங்கள் பரப்பளவு பெருமளவு குறைந்து விட்டது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. வீடு கட்டுமான பணிகள் அதிகரிப்பதால் மூலதனமான செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வருவாய் தரும் செங்கல் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன், புதுக்குடி, வலங்கைமான் போன்ற பகுதிகளில் களிமண்ணுடன், மணல் கலந்து செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் வளம் உள்ளது. தற்போது திருவாரூரில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் செங்கல் உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டது. சிலர் செங்கல்களை கலவை போட்டு தயார்செய்ய ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்து திருவாரூர் சூரனூர் பகுதியில் செங்கல் காலவாய் உரிமையாளர் கூறியதாவது:- கடந்த ஆண்டு மழையால் செங்கல் உற்பத்தி பாதித்தது. இதனால் இந்த ஆண்டு பலரும் உற்பத்தியை தொடங்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கல் என்று சொல்லக்கூடிய 1 செங்கல் இந்த ஆண்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



 

செங்கலை கொண்டு கட்டும் கட்டிடங்களுக்கு செங்கல் தான் பயன்படுத்த வேண்டும். பெரிய கட்டிடங்கள் கட்டவேண்டும் என்று இருப்பவர்கள் தான் ஹாலோ பிளாக் கற்கள் தான் பயன்படுத்துகின்றனர். வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதனை பயன்படுத்துகின்றனர். வீடு கட்ட செங்கல் தான் உகந்தது என்பதால் செங்கல்களைதான் விரும்புகின்றனர். உள்ளூரில் உற்பத்தி குறைந்து விட்ட காரணத்தால் வெளியூர் கற்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் தேவை அதிகரித்து வருகிறது. செங்கல் விலை உயர்ந்ததால் மற்ற கூலிகளும் உயர்ந்து விட்டது. சிலருக்கு போதியளவு மண் கிடைப்பதில்லை.

 

மண் இல்லாத காரணத்தால் சிலர் மீண்டும் விவசாயத்திற்கே திரும்பிவிட்டனர். மழைக்காலங்களில் மட்டும் செங்கல் உற்பத்தி தொடங்க முடியாமல் மற்ற காலங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்குகின்றனர். ஒரு செங்கல் தயாராக சுமார் 15 நாட்கள் வரை ஆகிறது. சொந்த நிலத்தில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை. ஆனால் வேறு இடத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடுபடுவர்கள் பல்வேறு செலவுகளுக்கு பல லட்சம் மட்டும் செலவாகும். சொந்த இடத்தில் உற்பத்தி செய்பவர்களுக்கு செலவுமட்டும் தான். 1 லட்சம் செங்கல் தயாரித்தால் அதில் 90 ஆயிரம் கற்கள் தான் மிச்சப்படும்.

 

மழைக்காலங்களில் உற்பத்தி செய்து வைக்கப்படும் செங்கல் மழையால் நனைந்து விடுகிறது. மீண்டும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் செங்கல் உற்பத்திக்கு சேகரித்து வைக்கப்படும் மண் மழைநீரில் கரைந்து போய் விடுகிறது. எனவே மழைக்காலங்களில் வேலையின்றி வருமானத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன் வரவேண்டும் என்றார்.